காஷ்மீர் தலைவர்கள் வீட்டுக்காவலில் இருந்து இன்னும் விடுவிக்கப்படாதது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதனால் பாதுகாப்பு கருதி காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் மெஹபூபா முப்தி, பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். அவர்களை விடுவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும், காஷ்மீர் அரசியல் தலைவர்கள் சிறை வைக்கப்பட்டு இன்றுடன் ஆறு மாதங்கள் ஆகியும் அவர்கள் விடுவிக்கப்படவில்லை.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், காஷ்மீரின் இரண்டு முன்னாள் முதல்வர்கள் எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் இன்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு ஆறு மாதங்கள் ஆகின்றன. அவர்கள் விடுதலை ஆவதற்கு இன்னும் எவ்வளவு காலம் ஆகும் என்று தெரியவில்லை? நாம் ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா?' என்று பதிவிட்டுள்ளார்.