உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, அயோத்தியில் மசூதி கட்டுவதற்கு சன்னி வக்பு வாரியத்திற்கு உத்தரப்பிரதேச அரசு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கியுள்ளது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்றும் ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளையை 3 மாதத்திற்குள் நிறுவ வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பர் மாதம் தீர்ப்பளித்தது.
அதுமட்டுமின்றி, மசூதி கட்டுவதற்கு சன்னி வக்பு வாரியத்திற்கு உத்தரப்பிரதேச அரசு 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது.
இதற்கான காலக்கெடு வருகிற பிப்ரவரி 9ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக 'ஸ்ரீராம் ஜென்மபூமி திரத் ஷேத்ரா' என்ற அறக்கட்டளையை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் ராமர் கோயில் கட்டுவதற்கான திட்டம் தயாராக இருப்பதாகவும் மக்களவையில் பிரதமர் மோடி இன்று அறிவித்துள்ளார்.
அதேபோன்று, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சன்னி வக்பு வாரியத்திற்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கியுள்ளதாக உத்தரப்பிரதேச அரசு இன்று அறிவித்துள்ளது.
அயோத்தியில் இருந்து 20 கிமீ தொலைவில் அயோத்தி - லக்னோ பாதையில் ரவுனாஹி(Raunahi) என்ற இடத்தில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப்பிரதேச மாநில அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்ததாக அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.