பேரவைத் தேர்தல் நடைபெறும் சூழலில் தில்லியில் பெண் காவல் உதவி ஆய்வாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பத்பர்கஞ்ச் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக நியமிக்கப்பட்ட ப்ரீத்தி அஹல்வாத், சக ஆண் உதவி ஆய்வாளர் தீபன்ஷு ரதியால் வெள்ளிக்கிழமை இரவு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
ரோகினி கிழக்கு மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து இரவு 9:30 மணிக்கு வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்த போது ப்ரீத்தி தலையில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.
சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது. கொலை நடந்த இடத்தில் நிபுணர் குழு ஆய்வு நடத்தியது. இந்த நிலையில், ப்ரீத்தியை, தீபன்ஷு சுட்டது சிசிடிவி காட்சிகளில் கண்டறியப்பட்டது. இதனிடையே தீபன்ஷு சோனேபட் பகுதியில் தற்கொலை செய்துகொண்டார். இவர்கள் இருவரும் ஒரே அணியில் உதவி ஆய்வாளர் பயிற்சி பெற்றவர்கள் ஆவர்.
இந்த நிலையில், கொலைச் சம்பவம் தொடர்பான காரணத்தை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தில்லிக்கு பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில் நடைபெற்றுள்ள இந்த கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.