ஜார்க்கண்ட் மாநிலத்தின் கும்லா மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் தாமதமாக வந்ததால் 48 வயதுப் பெண் ஒருவர் உயிரிழந்தார் என்று போலீஸார் இன்று (சனிக்கிழமை) தெரிவித்தனர்.
ஜனவரி 29-ஆம் தேதி சதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாதன் தேவி திடீரென தனது உடல்நிலை மோசமாகிவிட்டதாக புகார் கூறினார். சிகிச்சைக்காக அவரை வெள்ளிக்கிழமை மதியம் ராஞ்சியின் ராஜேந்திர மருத்துவ அறிவியல் நிறுவனத்திற்கு (ரிம்ஸ்) அனுப்பினார்கள்.
பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் நோயாளியை மாநில தலைநகருக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் ஒன்றை அழைத்ததாக கூறினர். ஆனால் அது மூன்று மணி நேரம் தாமதமாக வந்ததாகக் கூறப்படுகிறது. இது சிகிச்சையை த் தாமதப்படுத்தி, இறுதியில் அவரது மரணத்திற்கு வழிவகுத்தது.
"குடும்ப உறுப்பினர்கள் 108 ஆம்புலன்ஸ் சேவையின் ஓட்டுநருடன் பேசியதாகத் தெரிகிறது, ஆனால் ஓட்டுநர் சரியான நேரத்தில் வரவில்லை. இது குறித்து விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது" என்று கும்லா சதர் மருத்துவமனையின் சிவில் சர்ஜன் விஜய் பெங்காரா கூறினார் .
சதர் மருத்துவமனையில் இரண்டு ஆம்புலன்ஸ் மற்றும் ஆறு 108 சேவை ஆம்புலன்ஸ்கள் உள்ளன.