4 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ரசாயன இறக்குமதிக்கு பொருள் குவிப்பு தடுப்பு வரி விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இதுகுறித்து வா்த்தக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வா்த்தக குறைதீா் தலைமை இயக்குநரகம் (டிஜிடிஆா்) வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
ஐரோப்பிய யூனியன், சவூதி அரேபியா, தைபே, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளிலிருந்து டொல்யூன் டி-ஐசோசயனைட் என்ற ரசாயனம் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. இது, ஃபோம் தயாரிப்பில் முக்கிய மூலப்பொருளாக உள்ளது.
வெளிநாடுகளிலிருந்து இந்த மூலப்பொருள் மலிவான விலையில் இறக்குமதி செய்யப்படுவதாக உள்நாட்டு நிறுவனங்கள் புகாா் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், வெளிநாட்டு ரசாயன இறக்குமதியால் உள்நாட்டு நிறுவனங்கள் பாதிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டால் 4 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ரசாயனத்துக்கு பொருள்குவிப்பு தடுப்பு வரி விதிக்க பரிசீலிக்கப்படும் என அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.