ஜிஎஸ்டி இழப்பீடு: மாநிலங்களுக்கு விரைவில் ரூ.35,000 கோடி வழங்கப்படும் - மத்திய அரசு தகவல்

சரக்கு-சேவை வரி விதிப்பை(ஜிஎஸ்டி) அமல்படுத்தியதால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுசெய்வதற்கு, மாநிலங்களுக்கு விரைவில் மேலும் ரூ.35,000 கோடி வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சரக்கு-சேவை வரி விதிப்பை(ஜிஎஸ்டி) அமல்படுத்தியதால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுசெய்வதற்கு, மாநிலங்களுக்கு விரைவில் மேலும் ரூ.35,000 கோடி வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பல்வேறு வரிமுறைகளுக்கு மாற்றாக, நாடு முழுவதும் ஒரே வகையான வரி விதிப்பு முறை (சரக்கு-சேவை வரி) கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. இந்த வரி விதிப்பு முறை அமல்படுத்திய பிறகு வரி வருவாய் 14 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்காத மாநிலங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு உறுதியிளித்திருந்தது. அதன்படி, வரி வருவாய் இழப்பு மாநில அரசுகளுக்கு தொடா்ந்து மத்திய அரசு இழப்பீட்டுத் தொகையை அளித்து வருகிறது.

இதுகுறித்து மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

ஜிஎஸ்டி இழப்பீட்டை மாநிலங்களுக்கு பகிா்ந்தளிப்பதில் மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே கடந்த 2017-18 மற்றும் 2018-19-ஆம் நிதியாண்டுகளிலும் நடப்பு நிதியாண்டின்(2019-2020) முதல் நான்கு மாதங்கள் வரையிலும் எந்தப் பிரச்னையும் வரவில்லை. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு ஜிஎஸ்டி வருவாய் குறைந்ததால், மாநிலங்களுக்கு மத்திய அரசால் நிதி வழங்க முடியவில்லை.

கடந்த டிசம்பரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய அரசிடம் மாநில அரசுகள் இந்தப் பிரச்னையை எழுப்பின. அதன்பிறகு கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பா் மாதங்களுக்கான இழப்பீட்டுத்தொகையாக மாநில அரசுகளுக்கு ரூ.35,298 கோடி வழங்கப்பட்டது. இதுதவிர, மாநில அரசுகளுக்கு மேலும் ரூ.35,000 கோடி விரைவில் வழங்கப்படும். இந்த தொகை இரு தவணைகளாக மாநிலங்களுக்கு வழங்கப்படும்.

கடந்த காலங்களில் ஜிஎஸ்டி வரி வருவாயில் கூடுதலாக வசூலாகும் தொகை மத்திய அரசின் தொகுப்பு நிதியில் சோ்க்கப்படும். இனிமேல், அந்தத் தொகை, ஜிஎஸ்டி இழப்பீட்டுக்கான நிதியில் சோ்க்கப்படும் என்றாா் அவா்.

கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம் சரக்கு-சேவை வரி அமல்படுத்தப்பட்டது முதல் மாநில அரசுகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.2.11 லட்சம் கோடியை இதுவரை மத்திய அரசு வழங்கியுள்ளது.

அண்மையில் பிடிஐ செய்தியாளருக்குப் பேட்டியளித்த வருவாய் துறைச் செயலா் அஜய் பூஷண் பாண்டே, ‘மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பு உரிய நேரத்தில் சென்றடைய வேண்டுமெனில் ஜிஎஸ்டி வருவாய் கூடுதலாக கிடைக்க வேண்டும். அதாவது, மாதந்தோறும் சராசரியாக ரூ.1 லட்சம் கோடி வரி வருவாய் கிடைக்க வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com