தில்லி தேர்தல் முடிவுகளை ஏற்பதாகவும், அரவிந்த் கேஜரிவால் தலைமையில் தில்லி முன்னேறும் என நம்புவதாகவும் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்பியுமான கௌதம் கம்பீர் தெரிவித்தார்.
கடந்த 8ஆம் தேதி முடிவடைந்த தில்லி பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் ஆம்ஆத்மி கட்சி 55க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதன்மூலம் மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் நிலையைப் பெற்றுள்ளது. பாஜக 10 இடங்கள் வரை மட்டுமே முன்னிலையில் உள்ளது.
இதுதொடர்பாக கௌதம் கம்பீர் கூறுகையில்,
தில்லி தேர்தல் முடிவை பாஜக ஏற்கிறது. தில்லி மக்களுக்கும், ஆம்ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவாலுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த தேர்தலில் வெற்றிபெற பாஜக கடுமையாக முயற்சித்தது. இருப்பினும் வாக்காளர்களின் கவனத்தைப் பெற தவறிவிட்டோம். அரவிந்த் கேஜரிவால் தலைமையில் தில்லி முன்னேறும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு கம்பீர் தெரிவித்தார்.