தில்லி தேர்தலில் ஹிந்து, முஸ்லிம் வாக்குப் பிரிவினை தான் காங்கிரஸ் தோல்விக்கு காரணம் என்று சாந்தினி சௌக் காங்கிரஸ் வேட்பாளர் அல்கா லம்பா தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
தேர்தல் முடிவை நான் முழுமனதுடன் ஏற்கிறேன். ஆனால், எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டேன். இந்த தேர்தலில் ஹிந்து, முஸ்லிம் வாக்குகள் பிரிக்கப்பட்டது. காங்கிரஸ் தோல்விக்கு இது ஒரு காரணமாக இருக்காலம். இனிவரும் காலங்களில் தில்லி மக்களின் போராட்டங்களுடன் காங்கிரஸ் கட்சியின் இளைய தலைமுறையைச் சேர்ந்த புதுமுகங்கள் இணைந்து போராடுவது அவசியமாகும். இன்றைய போராட்டம் தான் நாளைய வெற்றியை நிர்ணயிக்கிறது என்று தெரிவித்தார்.
தில்லி பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட முன்னிலைப் பெறவில்லை. சாந்தினி சௌக் தொகுதியில் போட்டியிட்ட அல்கா லம்பா, 1,229 வாக்குகள் மட்டுமே பெற்று 3ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.
கடந்த 2015 தேர்தலில் இதே சாந்தினி சௌக் தொகுதியில் ஆம்ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அல்கா லம்பா, பின்னாளில் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக ஆம்ஆத்மி கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.