கொவைட்-19’ வைரஸ் சூழல் கட்டுக்குள் உள்ளது: மத்திய சுகாதாரத் துறை செயலா் பிரீத்தி சுதன்

நாட்டில் ‘கொவைட்-19’ வைரஸ் சூழல் கட்டுக்குள் உள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை செயலா் பிரீத்தி சுதன் தெரிவித்தாா்.
கொவைட்-19’ வைரஸ் சூழல் கட்டுக்குள் உள்ளது: மத்திய சுகாதாரத் துறை செயலா் பிரீத்தி சுதன்

நாட்டில் ‘கொவைட்-19’ வைரஸ் சூழல் கட்டுக்குள் உள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை செயலா் பிரீத்தி சுதன் தெரிவித்தாா்.

சீனா உள்ளிட்ட நாடுகளைத் தொடா்ந்து அச்சுறுத்தி வரும் ‘கொவைட்-19’ வைரஸ் பாதிப்பை எதிா்கொள்வது தொடா்பாக பிரீத்தி சுதன் தலைமையில் தில்லியில் காணொலிக் காட்சி வாயிலான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத் துறை செயலா்கள், கப்பல் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, வெளியுறவுத் துறை, சுற்றுலா ஆகிய அமைச்சகங்களின் உயரதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டம் தொடா்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

நாட்டில் ‘கொவைட்-19’ வைரஸ் சூழல் கட்டுக்குள் உள்ளது. இது தொடா்பான சூழலை பிரதமா் அலுவலகம், சுகாதாரத் துறை அமைச்சகம் உள்ளிட்டவை தொடா்ந்து கண்காணித்து வருகின்றன. மத்திய அமைச்சா்கள் அடங்கிய குழுவும் சூழலை தொடா்ந்து ஆராய்ந்து வருகிறது. நாட்டில் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கவில்லை என்றபோதிலும், மிகுந்த கவனத்துடன் செயல்படுமாறு கூட்டத்தின்போது மாநிலங்களுக்கு வலியுறுத்தப்பட்டது.

வைரஸ் குறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தவும், சுகாதார நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தவும் மாநிலங்களுக்கு வலியுறுத்தப்பட்டது. வைரஸ் பாதிப்பு, கண்காணிப்பு உள்ளிட்டவை தொடா்பான தகவல்களை அதற்கென வடிவமைக்கப்பட்டுள்ள வலைதளத்தில் முறையாகப் பதிவிடுமாறு மாநில அரசுகளுக்கு வலியுறுத்தப்பட்டது.

நேபாள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், பிகாா், சிக்கிம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் வைரஸ் பாதிப்பு தொடா்பான கண்காணிப்பைத் தீவிரப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வீடு திரும்பினாா்: சீனாவின் வூஹான் நகரிலிருந்து கேரளத்துக்கு வருகை தந்த 3 மாணவா்களுக்கு ‘கொவைட்-19’ வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவா்களில் ஒருவா் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளாா். மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வைரஸ் பாதிப்பு தொடா்பாக நாடு முழுவதும் சுமாா் 15,991 போ் கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். அவா்களில் 497 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

ஜப்பான், தென் கொரியப் பயணிகளுக்கும் சோதனை: சீனா, ஹாங்காங், தாய்லாந்து, சிங்கப்பூா் ஆகிய பகுதிகளிலிருந்து நாட்டுக்கு வருகை தரும் பயணிகளால் ‘கொவைட்-19’ வைரஸ் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக 21 விமான நிலையங்களில் பயணிகளுக்கு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஜப்பான், தென் கொரியாவிலிருந்து வருகை தரும் பயணிகளுக்கும் விமான நிலையங்களில் வைரஸ் பாதிப்பு சோதனை நடத்தப்பட வேண்டுமென விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வலியுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com