மாதவிடாய் நாள்களில் கணவருக்கு சமைக்கும் பெண்கள் மறுபிறவியில் நாயாகப் பிறப்பார்கள்: சாமியாரின் சர்ச்சைப் பேச்சு

மாதவிடாய் நாள்களில் கணவருக்காகப் பெண்கள்  உணவு சமைத்தால், அடுத்த பிறவியில் அவர்கள் பெண் நாயாகத்தான் பிறப்பார்கள் என சுவாமி கிருஷ்ணஸ்வரூப் தாஸ்ஜி தெரிவித்திருப்பது சர்ச்சையாகியுள்ளது.
யூடியூப்
யூடியூப்


பெண்கள் மாதவிடாய் நாள்களில் கணவருக்காக உணவை சமைத்தால், அடுத்த பிறவியில் அவர்கள் பெண் நாயாகத்தான் பிறப்பார்கள் என சுவாமி கிருஷ்ணஸ்வரூப் தாஸ்ஜி தெரிவித்திருப்பது சர்ச்சையாகியுள்ளது.

குஜராத் மாநிலம் பூஜ் பகுதியில் உள்ள சுவாமி நாராயண் கோயிலைச் சேர்ந்த சுவாமி கிருஷ்ணஸ்வரூப் தாஸ்ஜி ஆற்றும் சொற்பொழிவுகள் பல அந்தக் கோயிலின் யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அவர் சொற்பொழிவு ஆற்றும் விடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த விடியோவில் அவர் சொற்பொழிவு ஆற்றிய நேரம் மற்றும் இடம் குறித்த தகவல் ஏதும் இல்லை. ஆனால், அந்த விடியோவில் அவர் பேசிய விஷயம் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

அதில் அவர் பேசியிருப்பதாவது:

"மாதவிடாய்க் காலத்தில்  பெண்கள் சமைத்த உணவை உண்டால் ஆண்கள் அடுத்த பிறவியில் காளை மாடுகளாகப் பிறப்பார்கள். என்னுடைய பார்வை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் எனக்குக் கவலையில்லை. ஆனால், இவையனைத்தும் சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

மாதவிடாய் நாள்களில் கணவருக்காக உணவைச் சமைத்தால் பெண்கள் நிச்சயம் அடுத்த பிறவியில் பெண் நாய்களாகத்தான் பிறப்பார்கள்.

மாதவிடாய் நாள்கள் என்பது தவமிருப்பது போன்றது என்பதைப் பெண்கள் உணரமாட்டார்கள். இவை நமது சாஸ்திரங்களில் எழுதப்பட்டுள்ளன. இதை உங்களிடம் சொல்வதற்கு எனக்கும்கூட விருப்பம் இல்லை. ஆனால், நான் உங்களை எச்சரிக்க வேண்டும். ஆண்கள் சமைக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். உங்களுக்கு அது உதவும்" என்றார்.

முன்னதாக, கடந்த 11-ஆம் தேதி பூஜ் பகுதியில் ஸ்ரீ சகஜானந்த் பெண்கள் கல்வி நிறுவனத்தின் விடுதியில் தங்கியிருக்கும் பெண்களில் மாதவிடாய் காலத்தில் இருக்கும் பெண்கள் யார் என்பதை அறிய அங்கு தங்கியிருந்த 68 பெண்களும் உள்ளாடைகளை நீக்கி சோதனைக்குட்படுத்தப்பட்டனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்தச் செயல் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து, இதுதொடர்பாக மாணவியர் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. மாநில மற்றும் தேசிய மகளிர் ஆணையம் சார்பில் கல்லுரி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக கல்லூரி முதல்வர் உட்பட மூவரை காவல் துறையினர் நேற்று (திங்கள்கிழமை) கைது செய்தனர். 

இந்தக் கல்லூரியை நடத்தும் கோயிலுடன் சுவாமி கிருஷ்ணஸ்வரூப் தாஸ்ஜி தொடர்பில் இருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com