பள்ளி மாணவர்களின் திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக 17 ஆயிரம் சுயதொழில் முனையும் தன்னார்வலர்களை நியமனம் செய்ய தில்லி அரசு முடிவு செய்துள்ளதாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
பள்ளி மாணவர்களுக்கான சுயதொழில் முனைவேர் திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டம் தொடர்பாக தில்லி துணை முதல்வரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா கூறுகையில்,
பள்ளியின் ஒவ்வொரு வகுப்பறையையும் சென்றடையும் விதமாக 17 ஆயிரம் சுயதொழில் முனையும் தன்னார்வலர்களை நியமிக்க முடிவு செய்துள்ளோம். இதன்மூலம் மாணவர்களின் திறன் மேம்பாட்டை வளர்க்கும் விதமான பயிற்சிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாணவரும் தங்களின் திறன் மேம்பாட்டை அனுபவ ரீதியில் பெற இந்த நடைமுறை உதவியாக அமையும். வித்தியாசமான சிந்தனைகள் இளம் வயதிலேயே ஏற்படும்.
ஒவ்வொரு தன்னார்வலரின் கீழ் 30 முதல் 40 மாணவர்கள் பயிற்சியில் பங்கேற்கவுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையிலான புரிந்துணர்வு அதிகப்படும். 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1,000 ரொக்கம் வழங்கி அதன்மூலம் தொழில்முறையாக திறன் மேம்பாடு ஊக்குவிக்கப்படும் என்று தெரிவித்தார்.