மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனான சந்திப்பின்போது ஷகீன் பாக் போராட்டம் குறித்து பேசவில்லை என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
தில்லியில் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. தில்லி முதல்வராக மூன்றாவது முறையாகப் பதவியேற்றுள்ள அரவிந்த் கேஜரிவால், பதவியேற்று மூன்று நாட்களே ஆகிய நிலையில், இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்தார்.
இந்த சந்திப்புக்குப் பிறகு தில்லி தலைமைச் செயலகத்தில் அரவிந்த் கேஜரிவால் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:
"இந்த சந்திப்பானது சுமூகமான முறையில் நல்ல சந்திப்பாக அமைந்தது. பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினோம். தில்லியின் வளர்ச்சிக்காக மத்திய அரசும், மாநில அரசும் இணைந்துப் பணியாற்ற இருவரும் ஒப்புக்கொண்டோம். நாங்கள் இணைந்து பணியாற்றுவோம்.
பிப்ரவரி 24, திங்கள்கிழமை முதல் மூன்று நாள்கள் பேரவைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
இதையடுத்து, இந்த சந்திப்பின்போது ஷகீன் பாக் போராட்டம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், அது குறித்து பேசவில்லை என்றார்.