தில்லி: மீண்டும் தில்லியில் ஒரு 1984 சம்பவத்தை அனுமதிக்க முடியாது என்று வன்முறை தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
புது தில்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்ட ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே வெள்ளி மாலை துவங்கி நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவத்தில் இதுவரை 22 பேர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இதுதொடர்பான வழக்கு தில்லி உயர் நீதிமன்றத்தில் புதனன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வடகிழக்கு தில்லிப் பகுதியில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்கள் தொடர்பான வழக்கில், வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய பாஜக தலைவர்கள் 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு விசாரணையின் போது நீதிபதி முரளிதர், 'மீண்டும் தில்லியில் ஒரு 1984 சம்பவத்தை எங்கள் கண்முன்னே அனுமதிக்க முடியாது; நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்' என்று தெரிவித்தார். அத்துடன் இறந்தவர்களின் உடலை முறையாக அப்புறப்படுத்துதல், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தனியான தொலைபேசி எண்கள் மற்றும் வீடுகளை இழந்துள்ளோர்க்கு தங்குமிட வசதிகள் ஆகியவற்றை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
இவை சுமுகமாக நடைபெற நீதிமன்றம் சார்பில் வழக்கறிஞர் ஒருவரை நியமிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தில்லியில் கடந்த 1984-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் மரணத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.