புது தில்லி: தில்லி வன்முறைக்காக மூன்று பாஜக தலைவர்களை கைது செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு, வரும் ஏப்ரல் 13-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு தில்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
புது தில்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்ட ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே வெள்ளி மாலை துவங்கி நடைபெற்ற வன்முறைச் சம்பவத்தில் இதுவரை 33 பேர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
கபில் மிஸ்ரா, அனுராக் தாக்குர் உள்ளிட்ட பாஜக தலைவர்களின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கள்தான் இந்த வன்முறைக்கு காரணம் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன
இந்நிலையில் மூன்று பாஜக தலைவர்களை கைது செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு, வரும் ஏப்ரல் 13-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு தில்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தில்லியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஹர்ஷ் மந்தர் என்பவர் தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில் தில்லியில் வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசிய கபில் மிஸ்ரா, அனுராக் தாக்குர் மற்றும் பர்வேஸ் வர்மா ஆகிய மூவரையும் உடனடியாக கைது செய்யய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த மனுவானது வியாழனன்று நீதிபதிகள் படேல் மற்றும் ஹரிஷங்கர் ஆகிய இருவர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார்.
அப்போது பதில் மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வேண்டும் என்று துஷார் மேத்தா கோரிக்கை வைத்ததால், அதை ஏற்று ஏப்ரல் 13-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.