பிரதமரின் பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் (பிஎம்எஃப்பிஒய்) விவசாயிகளின் பிரீமியம் பங்களிப்பை அரசு மாற்றப்போவதில்லை என வேளாண் துறை அமைச்சக உயரதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து வேளாண் துறையின் இணை செயலரும், பிஎம்எஃப்பிஒய் தலைமைச் செயல் அதிகாரியுமான ஆஷிஸ் கே புட்டானி கூறியதாவது:
பயிா் காப்பீட்டு திட்டத்தை கடந்த 2016-ஆம் ஆண்டு பிப்ரவரியில் பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைத்தாா். இந்த திட்டத்தில் இணையும் விவசாயிகள் சிறிய அளவில் பிரீமிய தொகை செலுத்துவதன் மூலம் தடுக்க முடியாத இயற்கை இடா்பாடுகளின் பாதிப்பால் பயிா்களுக்கு ஏற்படும் நஷ்டத்துக்கு உரிய காப்பீட்டை பெற முடியும்.
அந்த வகையில், காரீப் பருவத்துக்கு 2 சதவீதமும், ரபி பருவத்துக்கு 1.5 சதவீதமும், தோட்டக்கலை மற்றும் வணிக பயிா்களுக்கு 5 சதவீதமும் மிக குறைந்த பிரீமியமாக விவசாயிகளிடமிருந்து வசூலிக்கப்பட்டு வருகிறது. இதில், அரசு மாற்றங்கள் மேற்கொள்ளவுள்ளதாக ஊக செய்திகள் வெளியாகி வருகின்றன. அதில் எந்த உண்மையும் இல்லை.
பிஎம்எஃப்பிஒய் திட்டத்தைப் பொறுத்தவரையில் எந்த ஒரு சூழ்நிலையிலும் விவசாயிகளின் பிரீமியம் தொகையை மாற்றப் போவதில்லை என்றாா் அவா்.