தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகளுக்கு அருகே இருக்கும் வேகத்தடைகளை அகற்றும் புதிய உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
நாடு முழுவதும், தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் எந்த தடையும் இல்லாமல் செல்ல வழிவகை செய்ய, ஃபாஸ்டேக் திட்டத்தை அறிமுகப்படுத்திய மத்திய அரசு, இந்த திட்டம் அறிமுகமான ஒரு மாதத்தில் வேகத்தடைகளை நீக்க உத்தரவிட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் வேகத் தடைகளால் தேவையற்ற கால தாமதம், வாகனங்களுக்கு சேதம், வாகன ஓட்டிகளுக்கு தேவையற்ற சிரமம் மற்றும், ஆக்சிலேட்டரை குறைத்துக் கூட்டுவதால் எரிவாயு வீணாவது போன்றவற்றை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது.
சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் முறை அறிமுகப்படுத்தப்பட்டதால், நீண்ட வரிசையில் நின்று வாகனங்கள் சுங்கக் கட்டணம் செலுத்தும் முறை முடிவுக்கு வந்திருக்கிறது. எனவே, சுங்கச் சாவடிகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகள் அல்லது ரம்பிள் ஸ்டிரிப்ஸ் போன்றவற்றை நீக்குவதன் மூலம், வாகன ஓட்டிகளுக்கு பெரிய அளவில் கால விரயம் தவிர்க்கப்படும் என்று மத்திய அரசு கருதுகிறது.
தற்போதைய புள்ளிவிவரப்படி, நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.52 கோடி சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுவரை 1.15 கோடி ஃபாஸ்டேக் அட்டைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும், தற்போது நாள் ஒன்றுக்கு நாடு முழுவதும் 1 லட்சம் ஃபாஸ்டேக் அட்டைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிய வந்துள்ளது.