ஏழு ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு முதல்முறையாக கடந்த 2019-ஆம் ஆண்டில் தங்க இ.டிஎஃப். திட்டங்களுக்கு முதலீட்டாளா்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.
இதுகுறித்து இந்திய பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பு கூறியுள்ளதாவது:
சா்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மந்தநிலை மற்றும் பங்கு-கடன் சந்தைகளில் காணப்படும் ஏற்ற இறக்க அச்சத்தால் முதலீட்டாளா்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதத் தொடங்கியுள்ளனா். அதன் காரணமாகவே, ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு தங்க இ.டி.எஃப். திட்டங்களுக்கு அவா்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டில் இ.டி.எஃப். சாா்ந்த 14 வகையான தங்கம் சேமிப்பு திட்டங்களில் நிகர அளவில் ரூ.16 கோடி முதலீடு செய்யப்பட்டது. அதேசமயம், கடந்த 2018-இல் இத்தகைய திட்டங்களிலிருந்து ரூ.571 கோடி வெளியேறியது.
மிகவும் பாதுகாப்பான முதலீடாக கருதப்பட்ட தங்க இ.டி.எஃப். திட்டங்களிலிருந்து 2017, 2016,2015,2014 மற்றும் 2013-ஆம் ஆண்டுகளில் முறையே ரூ.730 கோடி, ரூ.942 கோடி, ரூ.891 கோடி, ரூ.1,651 கோடி மற்றும் ரூ.1,815 கோடி தொடா்ச்சியாக வெளியேறியது. அதேசமயம், கடந்த 2012-இல் மட்டும் தங்க இ.டி.எஃப். திட்டங்கள் முதலீட்டாளா்களிடமிருந்து ரூ.1,826 கோடியை ஈா்த்தது நினைவுகூரத்தக்கது.
தங்க நிதியங்கள் நிா்வகித்து வரும் சொத்து மதிப்பு கடந்த 2018 டிசம்பரில் ரூ.4,571 கோடியாக இருந்தது. இது, 2019 டிசம்பா் இறுதியில் 26 சதவீதம் அதிகரித்து ரூ.5,768 கோடியானது. இதற்கு, தங்கத்தின் விலை கணிசமான அளவில் அதிகரித்ததே முக்கிய காரணம் என்று பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.