மேற்கு வங்க மாநிலம் அசன்சோலில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு சில மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர். நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இரவு நடந்த இந்த சம்பவத்தின் பின்னணியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி இருப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், பாஜகவின் இந்த குற்றச்சாட்டை திரிணமூல் காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது.
அசன்சோல் பகுதியில் பாஜகவின் செல்வாக்கு அதிகரித்து வருவது பிடிக்காமல் திரிணமூல் காங்கிரஸ் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறது என்று பாஜக தலைவர் கோபால் ராய் குற்றம் சாட்டியுள்ளார்.
இப்பகுதியில் மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை நாங்கள் பூர்த்தி செய்து வருவது ஆளும் கட்சிக்கு பிடிக்கவில்லை என்றும் தீ விபத்து குறித்து தகவல் தெரிவித்தும் போலீஸார் மிகவும் தாமதமாக சம்பவ இடத்திற்கு வந்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இருப்பினும், பாஜக தலைவர் கூறிய குற்றச்சாட்டை திரிணமூல் கட்சித் தலைவர் ஹரேராம் திவாரி மறுத்தார். இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.