புது தில்லி: இளைஞர்களிடம் பேச பிரதமருக்கு தைரியம் இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
நாட்டில் நிலவும் அரசியல் சூழல் குறித்து விவாதிக்க காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தில்லியில் எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். இந்தக் கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், லோக் தந்திரிக், ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ், இடதுசாரித் தலைவர்கள் சீதாராம் யெச்சூரி மற்றும் டி. ராஜா ஆகியோர் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பங்கேற்றுள்ளார். அதேநேரம் காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தி, மன்மோகன் சிங், குலாம் நபி ஆசாத் மற்றும் அகமது படேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி கூறியதாவது:
நாட்டில் வேலை வாய்ப்பின்மை மற்றும் பொருளாதார மந்தநிலை மிகப்பெரும் பிரச்னையாக உள்ளது.
கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாட்டில் வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. அதேபோல் பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்து வருகிறது.
இந்தியப் பொருளாதாரம் ஏன் வீழ்ந்தது என்பது பற்றி இளைஞர்களிடம் சென்று பிரதமர் மோடி விளக்க வேண்டும்.
இளைஞர்களின் குரலுக்கு அரசு செவி சாய்க்க வேண்டும்; அதைவிடுத்து அவர்களை அடக்கக் கூடாது.
துரதிர்ஷ்டவசமாக பிரதமருக்கு அதற்கு தைரியம் இல்லை.
இவ்வாறு ராகுல்காந்தி தெரிவித்தார்.