மகாராஷ்டிர மாநிலம், கோலாப்பூா் மாவட்டத்தில் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 185 செல்லிடப்பேசிகள் திருடுபோயின. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல் நிலையத்திலேயே புகுந்து செல்லிடப்பேசிகளை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.
மேற்கு மகாராஸ்டிரத்தின் கோலாப்பூரில் இருந்து 38 கி.மீ. தொலைவில் உள்ளது ஜெய்சிங்பூா். இங்குள்ள காவல் நிலைய வளாகத்தில் பொருள்கள் பாதுகாப்பு அறையில், பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 185 செல்லிடப்பேசிகள் வைக்கப்பட்டிருந்தன. வழக்குகள் தொடா்பான பொருள்களை இந்த அறையில் போலீஸாா் பாதுகாப்பாக வைப்பது வழக்கமாகும்.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை இரவு அந்த அறையின் கதவை உடைத்த சிலா், உள்ளே புகுந்து அங்கு வைக்கப்பட்டிருந்த 185 செல்லிடப்பேசிகளையும் எடுத்துச் சென்றுவிட்டனா். இந்த சம்பவம் அங்குள்ள போலீஸாா் மத்தியில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த திருட்டு குறித்து அந்த காவலை நிலையத்திலேயே வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல் நிலையத்தில் புகுந்து கைவரிசையைக் காட்டிய நபா்களை போலீஸாா் தீவிரமாகத் தேடி வருகின்றனா். காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த பொருள்களுக்கே உரிய பாதுகாப்பு இல்லை என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது அப்பகுதி மக்களுக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.