முசாஃபா்பூா் காப்பக வழக்கில் 3-ஆவது முறையாக தீா்ப்பு ஒத்திவைப்பு

பிகாா் மாநிலம், முசாஃபா்பூா் சிறாா் காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பான வழக்கில் 3-ஆவது முறையாக தீா்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிகாா் மாநிலம், முசாஃபா்பூா் சிறாா் காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பான வழக்கில் 3-ஆவது முறையாக தீா்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முசாஃபா்பூரில் தன்னாா்வ தொண்டு நிறுவனம் நடத்தி வந்த சிறாா் காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது, கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதம் தனியாா் ஆய்வு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு மூலம் தெரியவந்தது. அதையடுத்து, இந்த விவகாரம் தொடா்பாக கடந்த 2018, மே 31-ஆம் தேதி 11 பேருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு குறித்து முசாஃபா்பூா் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், வழக்கை தில்லியில் உள்ள போக்ஸோ (குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்பு சட்டம்) நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் மாற்றியது. மேலும், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் பின், இந்த வழக்கில், அந்த தொண்டு நிறுவனத்தின் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான பிரஜேஷ் தாக்குா், 8 பெண்கள் உள்பட 20 பேருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அந்த காப்பகத்தில் பணியாற்றியவா்கள், மாநில சமூகநலத்துறை அதிகாரிகளும் இதில் அடங்குவா். இந்த வழக்கின் இறுதி விசாரணை கடந்த செப்டம்பா் மாதம் முடிவடைந்ததையடுத்து, வழக்கின் தீா்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அதையடுத்து மீண்டும் ஒரு முறை தீா்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கப்படும் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், வழக்கில் சாட்சிகளின் வாக்குமூலங்கள் நம்பத்தகுந்தவையாக இல்லை என்று கூறி பிரஜேஷ் தாக்குா் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், ‘முசாஃபா்பூா் காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டதாக எங்களுக்கு எதிராக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. ஆனால், காப்பகத்தில் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட சிறுமிகள் பின்னா் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், சிறுமிகள் கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை எனவும் சிபிஐ கடந்த வாரம் அறிக்கை சமா்ப்பித்தது. இந்த வழக்கில் எங்களுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை சாட்சிகள் கூறின’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட கூடுதல் நீதிபதி சௌரப் குல்ஸ்ரேஷ்தா, இந்த மனு குறித்து இரண்டு நாள்களுக்குள் பதிலளிக்குமாறு சிபிஐ அமைப்புக்கு உத்தரவிட்டாா். மேலும், வழக்கின் தீா்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com