இன்று (வியாழக்கிழமை) காலை தில்லி மெட்ரோவின் ப்ளூ லைன் பகுதியின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (டிஎம்ஆர்சி) தெரிவித்துள்ளது. இதற்குக் காரணம் ஒரு பயணி துவர்கா மோர் மெட்ரோ நிலையத்தில் தண்டவாளத்தில் குதித்து தற்கொலை செய்தார் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (டிஎம்ஆர்சி) சுட்டுரை பக்கத்தில் காலை 9.59 மணிக்கு வெளியிட்டுள்ள தகவலில், "இச்சம்பவம் காரணமாக புளூலைன் வழித்தடத்தில் சேவையில் இடையூறு ஏற்பட்டது. துவாரகா துறை 21 மற்றும் ராஜீவ் செளக் இடையிலான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டது. எனினும் பின்னர் இயல்பு நிலைக்குத் திரும்பியது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புளூலைன் மெட்ரோ ரயில் வழித்தடம் தில்லியில் மிகவும் பரபரப்பான ஒன்றாகும். இது தில்லியிலிருந்து உத்தரப்பிரதேசத்தின் நொய்டா மற்றும் காஜியாபாத் ஆகிய இடங்களுக்கு ஆயிரக்கணக்கான பயணிகளை தினமும் ஏற்றிச் செல்கிறது.