முதலில் பொருளாதாரத்துக்கு நோபல் பரிசு பெற்ற அபிஜித் பேனர்ஜி சொல்வதைக் கண்டு கொள்ளவில்லை. இப்போது அமேசான் நிறுவனர் ஜெஃப் பிசாஸை கண்டு கொள்ளவில்லை. இப்படியே, யார் சொல்வதையும் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டால் பொருளாதாரம் வளர்ந்து விடும் என மத்திய ரயில்வே துறை அமைச்சா் பியூஷ் கோயலை சாடியுள்ளார் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்.
இந்தியப் பொருளாதாரம் மந்த நிலையையும் தாண்டி, நிதி நெருக்கடியிலும் சிக்கித் தவித்துக் கொண்டு இருக்கிறது. இதற்காக, மத்திய அரசுக்கு வர வேண்டிய வரி வருவாய்கள் குறைந்தன் மூலம் ஏற்பட்ட பற்றாக்குறையை, மத்திய ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு நிறுவனங்கள் மூலம் நிரப்புவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த 15, 16 ஆம் தேதிகளில் உலக ஆன்லைன் வியாபார நிறுவனமான அமேசான், சம்பவ் என்கிற பெயரில் சிறு குறு தொழில்முனைவோர்களுக்கான கூட்டத்தை தில்லியில் நடத்தியது. இந்த கூட்டத்திலேயே அந்நிறுவனத்தின நிறுவனர் ஜெஃப் பிசாஸ், இந்தியாவில் சிறு குறு தொழில்களை டிஜிட்டலைஸ் செய்வதற்காக 1 பில்லியன் டாலரை முதலீடு செய்யப் போவதாகச் சொன்னார்.
பின்னர் அந்த முதலீடு குறித்துப் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அமேசான் நிறுவனம் இந்தியாவில் 1 பில்லியன் டாலரை முதலீடு செய்வதால், இந்தியாவுக்கு எந்தவொரு பெரிய உதவியையும் செய்துவிடவில்லை என கூறினார்.
பியூஷ் கருத்துக்கு, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்க பதிவில், முதலில் பொருளாதாரத்துக்கு நோபல் பரிசு பெற்ற டாக்டர் அபிஜித் பேனர்ஜி கருத்தை கண்டுகொள்ளவில்லை. தற்போது அமேசான் நிறுவனர் ஜெஃப் பிசாஸ் கருத்தையும் கண்டு கொள்ளாத பியுஷ் கோயல், இந்தியாவின் பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலராக மாற்றுவதற்காக, தொடர்ந்து கூகுள் நிறுவனத் தலைவர் சுந்தர் பிச்சை கருத்தையும், மைக்ரோசாஃப்ட் நிறுவனத் தலைவர் சத்யா நாதெல்லா கருத்தையும் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும், இப்படியே யாருடைய கருத்தையும் கண்டுகொள்ளாமல் இருந்தால் பொருளாதாரம் வளர்ந்துவிடும் என ட்ரோல் செய்து இருக்கும் சிதம்பரம், இப்படியே, யாருடைய கருத்தையும் காதுகொடுத்து கேட்காமல் இருந்தால் தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் இறக்குமதியும், ஏற்றுமதியும் அதிகரிக்கத் தொடங்கிவிடும் என பயங்கரமாக ட்ரோல் செய்து உள்ளார்.
மேலும், ஜெஃப் பிசாஸ் போன்ற பெரு நிறுவன முதலாளிகளை பியூஷ் கோயல் பொருட்படுத்தவில்லை என்றால், அவர்களுக்கு எந்தவொரு பிரச்னையும் இல்லை என சிதம்பரம் கூறியுள்ளார்.