தில்லி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரசின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
தில்லி: தில்லி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரசின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் ஞாயிறன்று வெளியிடப்பட்டுள்ளது.
70 உறுப்பினா்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 8-ஆம் தேதி தோ்தல் நடைபெறும் என தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஜனவரி 21 ஆகும். பிப்ரவரி 11-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
ஆணையம் அறிவித்திருந்தபடி கடந்த செவ்வாய்க்கிழமை மனுத் தாக்கல் தொடங்கியது. கடந்த 14-ஆம் தேதியன்று ஆளும்கட்சியான் ஆம் ஆத்மி தனது முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதேபோல பாஜகவின் முதல் கட்ட பட்டியல் கடந்த வெள்ளியன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தில்லி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரசின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் ஞாயிறன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் 10 பெண்கள், நான்கு இஸ்லாமியர்கள் உட்பட 54 பேர் இடம்பெற்றுள்ளனர். 33 புதிய வேட்பாளர்களும் உள்ளனர். டெல்லி காங்கிரஸ் செயல் தலைவர்கள் ராஜேஷ் லிலோதியா மங்கோல் புரி தொகுதியிலும், தேவேந்திர யாதவ் பத்லி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
பட்டியல் வெளியிடுவதற்கு சற்று முன்பாக ஆம் ஆத்மி கட்சியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் அந்தக் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்த ஆதர்ஸ் சாஸ்த்ரி, துவாரகாவில் போட்டியிடுகிறார்.
காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சிக்கு நான்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இறுதிக்கட்ட பட்டியல் இன்று இரவு அல்லது நாளை காலை வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.