புது தில்லி: ராமர் பாலம் தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்தியா- இலங்கை இடையே அமைந்துள்ள மணல் திட்டுகளால் ஆன பாலம் போன்ற அமைப்பு ராமாயண கதையின்படி, இந்தியாவிலிருந்து இலங்கைக்கு செல்ல ராமரால் கட்டப்பட்டதாக மக்களால் நம்பப்படுகிறது. இந்தப் பகுதியில் சேது கால்வாய் அமைக்க வாஜ்பாய் காலத்தில் பாஜக அரசு திட்டமிட்டது.
இந்நிலையில் இது இந்து மதத்தின் அடையாளம் என்பதால் அதனை பண்டையகால வரலாற்றுச் சின்னமாக அறிவிக்கவேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
தனது வழக்கை விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என நீதிமன்றத்தில் சுவாமி குறிப்பிட்டார். அப்போது இந்த விவகாரத்தை மூன்று மாதங்களுக்கு பிறகு எழுப்பும்படி குறிப்பிட்ட நீதிமன்றம், அப்போது மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.