ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீரின் டிரால் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ராணுவ வீரர் ஒருவர் படுகாயம் அடைந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தெற்கு காஷ்மீரின் டிரால் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் ராணுவ வீரர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
கிரு பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருந்ததாக ரகசியத் தகவல் கிடைத்ததையடுத்து, அந்தப் பகுதியில் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அங்கு நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஜெய்ஷ்-இ-முஹம்மது அமைப்பைச் சேர்ந்த வெளிநாட்டுப் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் ஒரு பயங்கரவாதி துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடத்திலிருந்து தப்பிச் சென்றதாகச் சொல்லப்படுகிறது.
உயிரிழந்த பயங்கரவாதி அபு சைபதுல்லா அல்லது அபு காசியம் ஆக இருக்கலாம் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. தப்பிச் சென்ற பயங்கரவாதியைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக, கடந்த ஜனவரி 21-ல் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ராணுவ வீரர் மற்றும் சிறப்புக் காவல் அதிகாரி இருவர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.