தில்லியில் கட்டட மேற்கூரை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் சனிக்கிழமை உயிரிழந்தனர்.
புதுதில்லியின் பஜன்பூரா பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தின் 4-ஆவது தளத்தின் மேற்கூரை திடீரென சனிக்கிழமை சரிந்து விழுந்தது. இதையடுத்து தீயணைப்புத்துறைக்கு மாலை 4:30 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
அந்தக் கட்டடத்தில் கல்விப் பயிற்சி மையம் நடைபெற்று வந்தது. அப்போது சுமார் 30 மாணவர்கள் பயிற்சி வகுப்பில் பங்கேற்றிருந்தனர்.
இந்த நிலையில், பயிற்சி மையத்தில் பயின்று வந்த மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கினர். அவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதில் 4 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியர் உட்பட 5 பேர் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
13 மாணவர்கள் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் 3 மாணவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.