அதிகாரப்பூர்வ தொலைத்தொடர்பில் நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக வாட்ஸ்ஆப் போன்ற பிரத்தியேக செயலியை உருவாக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான முக்கிய சோதனை முயற்சி தற்போது மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தால் நடத்தப்பட்டு வருகிறது.
'ஜிஐஎம்எஸ்' (அரசு உடனடி குறுஞ்செய்தி சேவை) என்று அந்த செயலியை அழைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இதன்மூலம் மின்னஞ்சல் சேவையும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. தேசிய தகவல் மையத்தின் மூலம் தற்போது நாளொன்றுக்கு 2 கோடி மின்னஞ்சல்கள் கையாளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தால் அரசாங்கத்துக்கான திறந்த மூல மென்பொருளை ஏற்றுக்கொள்வது குறித்த கொள்கைக்கு இணங்க திறந்த மூலத் தீர்வு மூலம் ஜிஐஎம்எஸ் வடிவமைக்கப்பட்டு வருவதாக அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனால் தீர்வு குறித்த அரசாங்கத்தின் திட்டமிடப்பட்ட கட்டுப்பாட்டை உறுதி செய்கிறது.
இதனை மாநில அரசுகள் தேவைப்பட்டால் அதிகாரப்பூர்வமாக அரசு ரீதியில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்ட் மற்றும் ஆப்பிளின் ஐஓஎஸ் என இரண்டிலும் இயங்குதளங்களில் பயன்படுத்தும் முறையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. மத்திய வெளியுறுவுத்துறை அமைச்சகம், உள்துறை அமைச்சகம், சிபிஐ, ரயில்வேத்துறை, கப்பல்படை, தகவல் மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் உள்ளிட்ட 17 அரசுத்துறைகள் இந்த செயலியின் பயன்பாட்டில் இணைக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருகிறது.
தற்போது இந்த சோதனைகளின் அடிப்படையில் 6,600 பயனாளர்கள் மூலம் 20 லட்சம் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஒடிஸா, குஜராத் உள்ளிட்ட மாநில அரசுகள் இந்த சோதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
சைபர் கிரிமினல் குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வரும் சூழலில் அரசுத்துறைகள் சார்பில் பயன்படுத்தப்படும் வாட்ஸ்ஆப் மற்றும் வீசேட் உள்ளிட்ட செயலிகளின் நம்பகத்தன்மை கேள்விக்குரியதாக உள்ளது. ஏனெனில் இதன்மூலம் அரசு சார்பில் முக்கிய கோப்புகள் மற்றும் ஆவணங்கள் பரிமாற்றம் செய்யப்படுகின்றன என்று முன்னாள் சைபர் பாதுகாப்புத்துறை அதிகாரி தெரிவித்தார்.