புது தில்லி: தில்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் தமிழகத்தின் சார்பில் இடம்பெற்ற வளநகர் ஊர்தியில் இடம்பெற்றிருந்த அய்யனார் சிலை பார்வையாளர்கள் அனைவரது கவனத்தையும் கவர்ந்தது.
தில்லியில் ஞாயிறன்று 71வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி தில்லி ராஜபாதையில் ஞாயிறு காலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தேசியக்கொடியை ஏற்றினார். பின்னர் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக்கொண்டார். குடியரசு தினவிழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
குடியரசு தின விழாவன்று தில்லி ராஜபாதையில் பல்வேறு மாநிலங்கள் சார்பில் 16 அலங்கார ஊர்திகள் பங்கேற்ற அணிவகுப்பு நடைபெற்றது. இதில் தமிழகத்தின் சார்பில் அய்யனார் கோவில் திருவிழாவை காட்சிப்படுத்தும் வகையில் அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடைபெற்றது.
தமிழகம் சார்பாக இடம்பெற்ற அலங்கார ஊர்தியில் தமிழர்களின் காவல் தெய்வமாக கருதப்படும் அய்யனார் சிலை காட்சிப்படுத்தப்பட்டது. சுமார் 17 அடி உயரம் கொண்ட பிரமாண்ட சிலை, அவருக்கு முன்னால் குதிரையும், காவலாளிகளும் இருப்பது போல் வடிவமைக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தின் பாரம்பரிய இசை, நடனம் என வண்ணமயமாக வலம் வந்த தமிழகத்தின் அலங்கார ஊர்தி பார்வையாளர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, பாராட்டுதல்களை பெற்றது.