மத்தியப் பிரதேச மாநிலத்தில் தொழில் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்குள் அனுமதி வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய கமல்நாத் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
விழாவில் பேசிய அவர், மத்தியப் பிரதேசத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தொழில் தொடங்குவதற்கு அனைத்து அனுமதிகளும் ஒரு வாரத்திற்குள் வழங்கப்படும். அவ்வாறு 7 நாட்களுக்குள் அனுமதி வழங்கப்பட்டால் அது அனுமதி வழங்கப்பட்டதாக கருதப்படும். இதன்மூலம் வேலை வாய்ப்புகள் அதிகமாகும். நாட்டின் பொருளாதாரம் மேம்படும். நமது மாநிலத்தில் இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டியதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது' என்று தெரிவித்தார்.
மேலும், ரியல் எஸ்டேட் துறையில் வேலைவாய்ப்பு திறனை கருத்தில் கொண்டு அதற்கு தேவையான அனுமதி எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் உள்ள தொழிலதிபர்கள் மத்தியப் பிரதேச மாநிலத்தில் முதலீடு செய்ய முன்வர வேண்டும்.
மாநிலத்தில் பழங்குடியினரின் உரிமைகள் குறித்த வழக்குகளின் மீது இன்னும் ஒரு மாதத்தில் முடிவெடுக்கப்படும் பழங்குடியின மக்களை பாதுகாப்பதற்காக புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது' என்று பேசினார்.