கரோனா வைரஸ் குறித்து கவலைப்படத் தேவையில்லை என கேரள சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா தெரிவித்துள்ளார்.
சீனாவில் பரவி வரும் கரோனா வைரஸ், உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. எனவே, இந்த வைரஸ் நோய் பரவுவதைத் தடுக்க சீனா மட்டுமல்லாது உலகின் பிற நாடுகளும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இது தொடர்பாக, கேரள மாநிலத்தில் 288 பேர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். இதில் 7 பேர் வெவ்வேறு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் வீட்டில் இருக்கும்படியே அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், அவர்களுடைய உடல்நிலை மோசமடைந்தால் மருத்துவர்களை அணுக வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோழிகோட்டில் சீனாவில் இருந்து திரும்பிய சுமார் 60 பேரை அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர். இந்த வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சீனாவின் வூஹானில் உள்ள கேரள மருத்துவ மாணவர்களை இந்தியா வரவழைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து கேரள தலைமைச் செயலர் டாம் ஜோஸ் இன்று (திங்கள்கிழமை) மத்திய அரசைத் தொடர்பு கொண்டார்.
கடந்த வாரம் சுகாதாரத் துறை உயர் அலுவலர்களைச் சந்தித்த அமைச்சர் கே.கே. ஷைலஜா, நிலைமையைக் கண்காணித்து எதிர்பாராத சூழல்களை எதிர்கொள்ளவும், தனி வார்டுகளை அமைக்கவும் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் கொச்சி விமான நிலையத்தில் சுகாதாரத் துறைக்கென்று பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.