பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது ஆலோசகர்கள் இணைந்து நாட்டின் பொருளாதாரத்தைப் புரட்டிப்போட்டுவிட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் புதன்கிழமை குற்றம்சாட்டினார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில்,
முன்பு நாட்டின் பொருளாதார நிலையில், மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.5 சதவீதமாகவும், பணவீக்கம் 3.5 சதவீதமாகவும் இருந்தது. ஆனால், தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.5 சதவீதமாகவும், பணவீக்கம் 7.5 சதவீதமாகவும் உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது பொருளாதார நிபுண ஆலோசகர்கள் இணைந்து நாட்டின் பொருளாதாரத்தைப் புரட்டிப்போட்டுவிட்டனர்.
2020 பட்ஜெட் தாக்கல் தொடர்பான தேவை மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு எதுவும் தெரியாது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தற்போது வெறும் 2.5 சதவீதமாகவே உள்ளது.
உலகளவில் இந்தியாவின் மீதான மதிப்பை பிரதமர் மோடி குலைத்துவிட்டார். நாடு முழுவதும் தற்போது வேலையின்மை பிரச்னை அதிகரித்து காணப்படுகிறது. ஆனால், அதுகுறித்து பிரதமர் மோடி இதுவரை எதுவும் பேசவில்லை, நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தார்.