புது தில்லி: கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் சீனாவின் வுஹான் நகரில் சிக்கியிருக்கும் இந்தியர்களை அழைத்து வர ஜனவரி 31ம் தேதி ஏர் இந்தியா விமானம் இயக்கப்பட உள்ளது.
ஏர் இந்தியா உயர் அதிகாரி அஷ்வினி லோஹானி இது பற்றி கூறுகையில், போயிங் 747 விமானத்தை இயக்க திட்டமிட்டிருப்பதாகவும், ஆனால் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில், மும்பை - தில்லி - வுஹான் இடையே விமானத்தை இயக்க இந்திய விமானப் போக்குவரத்துத் துறை அனுமதி வழங்கியுள்ளது.
அதே சமயம், விமானத்தில் செல்லும் விமானிகள், விமான ஊழியர்கள் மற்றம் அழைத்து வரப்படும் பயணிகள் அனைவரையும் பத்திரமாக சிறப்பு வார்டில் வைத்து தனிமைப்படுத்தி, மருத்துவ பரிசோதனை அளிப்பதோடு, அவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டியதும் அவசியமாகிறது. இதற்கான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த வேண்டியதும் அவசியமாகிறது.
கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதை அடுத்து சீனாவில் வுஹான் உட்பட 16 நகரங்களுக்கு போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.