புவனேஸ்வர்: புவனேஸ்வர் மற்றும் கட்டாக் நகரங்களில் இயக்கப்படும் பேருந்துகளில் பெண்களுக்கான இருக்கைகளில் ஆண்கள் அமர்ந்தால், அவர்களுக்கு அபராதம் விதிக்கும் முறையை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
பெண்களின் இருக்கைகளில் அமர்ந்து கொண்டு ஆண்கள் பல்வேறு தொந்தரவுகளை செய்வதாக தொடர்ந்து எழுந்த புகாரினைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
காவல்துறை ஆணையர் தலைமையில், தனியார் மற்றும் அரசுப் பேருந்துகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அதே சமயம், பேருந்துகளில் பெண்களுக்கு தொல்லை கொடுப்போர் பற்றி புகார் தெரிவிக்கவும் இலவச தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களும் பெண்களிடம் மரியாதையாக நடந்துகொள்ளும்படியும், பணி நேரத்தில் மது அருந்தாமல், நன்னடத்தையுடன் இருப்பதை பேருந்து நிர்வாகங்களும் உறுதி செய்ய வேண்டும் என்று காவல்துறை ஆணையர் அறிவுறுத்தினார்.