கரோனா பரவல்: மும்பையில் 144 தடையுத்தரவு பிறப்பிப்பு
மும்பை: அதிகரித்து வரும் கரோனா பரவலின் காரணமாக மும்பையில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே கரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலமாக மகாராஷ்டிரம் காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக தலைநகரான மும்பையில் பாதிப்பின் தீவிரம் அதிகமாக உள்ளது.
ஜூன் 30-ஆம் தேதி நிலவரத்தின்படி 28, 473 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4, 554 பேர் மரணமடைந்துள்ளனர். அதே நேரம் 44,170 பேர் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.
இந்நிலையில் அதிகரித்து வரும் கரோனா பரவலின் காரணமாக மும்பையில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
இதுதொடர்பாக மும்பை மாநகர காவல்துறை இணை ஆணையர் பிரணயா அசோக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மும்பை நகராட்சி அதிகாரிகளால தடை செய்யப்பட்ட பிரதேசம் என்று அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டோர் கூடுவது தடை செய்யப்படுகிறது. முன்னதாக விலக்கி கொள்ளப்படுவதாக அறிவிப்பு வரும்வரை இந்த தடையுத்தரவானது வரும் 15-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். அதேநேரம் அத்தியாவசிய பணிகள், அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லுதல் மற்றும் மருத்துவ காரணங்களுக்காக செல்வோருக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.