கரோனாவை எதிர்கொள்ள பதஞ்சலியின் ஆயுர்வேத மருந்துகளான சுவாசரி, கரோனில் தொகுப்புக்கு எவ்வித தடையுமில்லை என பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் தெரிவித்ததாவது:
"கரோனாவை எதிர்கொள்ள பதஞ்சலி சரியான பணியை செய்திருப்பதாக ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது. பதஞ்சலி சரியான பாதையை நோக்கி பயணிக்கத் தொடங்கியிருப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆயுஷ் அமைச்சகத்துடன் இணைப்பில் இருக்கும் மாநிலப் பிரிவிடம் இதற்கு உரிமம் பெற்றுள்ளோம். கரோனா சிகிச்சை என்ற வார்த்தையை ஆயுஷ் அமைச்சகம் உபயோகப்படுத்தவில்லை.
ஆயுஷ் அமைச்சகத்துடன் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை. தற்போது கரோனில், சுவாசரி உள்ளிட்டவற்றுக்குத் தடையில்லை. சுவாசரி கரோனில் தொகுப்பு மருந்துகள் இன்று முதல் நாடு முழுவதும் எவ்வித சட்டரீதியிலான இடையூறுகளின்றி கிடைக்கும். ஆயுஷ் அமைச்சகத்துக்கும், நரேந்திர மோடி அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்."
முன்னதாக, 'கரோனில்' மருந்து கரோனாவைக் கட்டுப்படுத்தும் என்று நாங்கள் ஒருபோதும் கூறவில்லை என்று பதஞ்சலி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் நேற்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.