இந்தியாவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை ஐந்து லட்சத்தை எட்டி வெறும் 5 நாள்களில், கரோனா பாதிப்பு ஆறு லட்சத்தைத் தொட்டுள்ளது.
நாள் ஒன்றுக்கு சராசரியாக 20 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்படுவதால், வெறும் 5 நாள்களில் மட்டும் இந்தியாவில் புதிதாக ஒரு லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
அதே சமயம், கரோனா பாதித்து இதுவரை 17,834 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை இன்று வெளியிட்ட புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
இந்தியாவில் முதல் கரோனா நோயாளி கண்டறியப்பட்டு பாதிப்பு ஒரு லட்சத்தை எட்ட 110 நாள்கள் ஆனது. ஆனால், அதன்பிறகு வெறும் 44 நாள்களில் நாட்டில் கரோனா பாதிப்பு ஆறு லட்சத்தை எட்டிவிட்டது.
வியாழக்கிழமை காலை நிலவரப்படி நாட்டில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 6,04,641 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 434 பேர் மரணம் அடைந்துள்ளனர். அதே சமயம், குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 3,59,859 ஆக உள்ளது. தற்போது 2,26,947 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இன்று தொடர்ந்து 6வது நாளாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்துக்கு அதிகமாக உள்ளது. கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் ஜூலை 1-ம் தேதி வரை நாட்டில் 4,14,106 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.