பெங்களூரு: கரோனா பாதித்து அறிகுறி இல்லாத அல்லது லேசான அறிகுறி உடையவர்களும், 50 வயதுக்கு உட்பட்டவர்களும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என்று கர்நாடக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறையை கர்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
அதே சமயம் வீட்டில் இருக்கும் கரோனா நோயாளிகளின் உடல் வெப்பநிலை மற்றும் ஆக்ஸிஜன் நுகர்வு உள்ளிட்டவை நாள்தோறும் கண்காணிக்கப்படும்.
நோயாளியின் கையில், அவரது விவரங்கள் கொண்ட பட்டை ஒன்று பொருத்தப்படும்.
அதே சமயம், வேறு உடல் நலக் குறைபாடு இருப்பவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படாது.
வீட்டில் இருக்கும் நோயாளிகள், தனி அறை மற்றும், அறையுடன் இணைந்த கழிவறை வசதி இருக்க வேண்டும்.
கரோனா உறுதி செய்யப்பட்டு 10 நாள்கள் வரை காய்ச்சல் இல்லாமல் இருந்தால் அல்லது 17 நாள்கள் வரை வீட்டில் தனிமைப்படுத்தப்படுவர்.
மருத்துவர்கள் பரிசோதனை செய்த பிறகே, கரோனா நோயில் இருந்து மீண்டவர் வீட்டில் தனிமைப்படுத்துவதில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.