பிரதமர் மோடி தனது எந்த உரையிலும் சீனா’ என்று குறிப்பிடுவதில்லையே, ஏன் என மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
லடாக் எல்லை கல்வான் பள்ளத்தாக்கில் சீனப்படைகள் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். தொடர்ந்து, வீரர்கள் மரணமடைந்தது குறித்தும், சீன ஆக்ரமிப்பு குறித்தும் எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றன.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், 'முதலமைச்சர்கள் கூட்டத்தில் உரை, தொலைக்காட்சியில் உரை, லடாக்கில் ஜவான்கள் மத்தியில் உரை என்று எந்த உரையிலும் ‘சீனா’ என்று பிரதமர் மோடி குறிப்பிடுவதில்லையே, இதன் மர்மத்தை யாராவது விளக்குவார்களா?
இந்திய நிலப்பகுதியில் ஆக்கிரமித்தது சீனத் துருப்புகளா அல்லது சந்திரமண்டலத்திலிருந்து வந்த அந்நியர்களா? பிரதமர் மோடி அஞ்சுகிறார் என்று சொல்லமாட்டேன், ஆனால் தயங்குகிறார் என்று சொல்வேன். ஏன் இந்தத் தயக்கம்?' என்று பதிவிட்டுள்ளார்.