வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஜூலை 11 முதல் ஜூலை 19 வரை இந்தியா - அமெரிக்கா இடையே விமான சேவை வழங்க இருப்பதாக ஏர் இந்தியா அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும், இதற்கான டிக்கெட் முன்பதிவு ஏர் இந்தியா இணையதளத்தில் ஜூலை 6 இரவு 8 மணி முதல் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று நியூயார்க்கில் ஜூலை 6 அன்று காலை 10.30 மணிக்கும், சிக்காகோவில் காலை 9.30 மணிக்கும், சான் பிரான்சிஸ்கோவில் காலை 7.30 மணிக்கும் முன்பதிவு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரு வழித்தடத்திலும் சேர்த்து மொத்தம் 36 விமானங்கள் இயக்கப்பட உள்ளன.
முன்னதாக, கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், ஜூலை 31 ஆம் தேதி வரை சர்வதேச பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்படுவதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
அதே நேரத்தில் வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வரும் 'வந்தே பாரத்' திட்டத்தின் மூலம் சிறப்பு விமானங்களுக்கும், சரக்கு சேவை விமானங்களுக்கும் அனுமதி அளிக்கப்படும் என்று அமைச்சகம் கூறியுள்ளது.