மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 279 காவலர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா தொற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ள மாநிலம் மகாராஷ்டிரம். அங்கு கரோனா தடுப்புப் பணியில் பணியாற்றி வரும் காவலர்களும் கரோனா தொற்றுக்கு அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில், கரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகியுள்ள காவலர்களின் எண்ணிக்கை குறித்த சமீபத்திய தரவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, அங்கு புதிதாக 279 காவலர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்தம் பாதிப்புக்குள்ளான காவலர்கள் எண்ணிக்கை 5,454 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1,078 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மொத்தம் 70 காவலர்கள் பலியாகியுள்ளனர்.