புது தில்லி: சீன வெளியுறவுத் துறை அமைச்சருடன் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தொலைபேசி வாயிலாக நேற்று பேச்சுவார்த்தை நடத்தியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி உடன், அஜித் தோவல் நேற்று தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சமீப காலமாக இந்தியா - சீனா எல்லைப் பகுதியில் ஏற்பட்டு வரும் பதற்றமான சூழ்நிலை குறித்து மிக விரிவாக ஆலோசனை நடத்தி இரு தரப்பு கருத்துகளையும் பகிர்ந்து கொண்டுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், இது குறித்து ராஜாங்க மற்றும் ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்த இரு தரப்பிலும் சம்மதம் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
லடாக்கில் பிரச்னைக்கு உரிய இடத்தில் படைகளை விலக்கிக் கொள்ள இந்திய - சீன தரப்பில் ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும், படைகளை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையை இரு தரப்பிலும் முழுமையாக செய்து முடிக்கவும் ஒப்புக் கொள்ளப்பட்டதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.
இரு தரப்பிலும் அவரவருக்கு உரிய முழு மரியாதையை அளிக்கவும், தற்போதைய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியை அதே நிலையில் நீடிக்கவும், அதை மாற்றும் வகையில் எந்த நடவடிக்கையிலும் ஈடுபட மாட்டாது என்றும், அமைதிக்கு குந்தகம் விளைவிக்கவோ, எல்லைப் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலோ எந்தவிதமான நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என்றும் ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.