டிக்டாக் உள்பட சீன செயலிகளுக்கு தடை விதிப்பது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வெளியாகும் முன்னணிச் செய்தி நிறுவனத்திடம் பாம்பியோ இதனைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
பல்வேறு விவகாரங்களில் சீனா - அமெரிக்கா இடையே கடும் மோதல் நிலவி வரும் நிலையில், சீன செயலிகளுக்கு தடை விதிப்பது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருகிறது.
சீனாவின் வூஹான் பகுதியில் கரோனா தொற்று கண்டறியப்பட்டது முதல், உண்மை நிலவரங்களை சீனா மறைத்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.
முன்னதாக, சீன - இந்திய எல்லைப் பகுதியில் இரு ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவத்தினர் 20 பேர் வீர மரணம் அடைந்த சம்பவத்தைத் தொடர்ந்து, டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டது.
பொதுமக்களின் விவரங்கள் மற்றும் தகவல் திருட்டு போன்ற காரணங்களால் சீன செயலிகளுக்கு தடை விதிப்பதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.