திருவனந்தபுரம்: கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் ஒரு வார முழு பொது முடக்கம் திங்கள்கிழமை அமலுக்கு வந்தது. இதையொட்டி, மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் செயல்படவில்லை. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன. அரசுப் பேருந்து உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து இயங்கவில்லை.
கேரளத்தில் கரோனா பாதிப்பு குறைவாக இருந்த நிலையில் கடந்த சில நாள்களாக வேகமாக அதிகரித்து 5 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 225 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இவர்களில் 22 பேர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர்கள். தலைநகரில் கரோனா தொற்று அதிகரித்து வருவதையொட்டி முழு பொது முடக்கத்தை அமல்படுத்த மாநில அரசு முடிவு செய்தது. அதன்படி, முழு பொது முடக்கம் திங்கள்கிழமை அமலுக்கு வந்தது. இதையொட்டி, மாநில முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் உள்ள அவரது அதிகாரபூர்வ இல்லத்தில் இருந்து அரசுப் பணிகளைக் கவனித்து வருகிறார். தலைமைச் செயலகத்திலும் முக்கியமான துறை அலுவலகங்கள் மட்டும் செயல்பட்டு வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
கரோனா பரவல் அதிகரித்து வருவதையொட்டி, "தலைநகர் திருவனந்தபுரம் ஓர் எரிமலையின் மீது அமர்ந்துள்ளது. அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம். முழு பொது முடக்கம் முடிந்த பின்னரும் கட்டுப்பாடுகள் தொடரும் என மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்தார்.
"மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகள் மற்றும் நெடுஞ்சாலைகள் சீல்வைக்கப்பட்டுள்ளன. தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வருவோர் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும்' என காவல் துணை ஆணையர் திவ்யா கோபாலன் தெரிவித்தார்.
கரோனா சமூகப் பரவலைத் தடுக்கும் வகையில் ஏற்கெனவே வடக்கு காசர்கோடு, கண்ணூர் மாவட்டங்கள் மற்றும் மலப்புரம் மாவட்டத்தில் சில பகுதிகளில் முழு பொது முடக்கம் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டது. அதைப் பின்பற்றி இப்போது திருவனந்தபுரத்தில் அமல்படுத்தப்பட்டிருக்கிறது.