இவ்வுலகில் அனைவரையும் விலைக்கு வாங்கிவிடலாம் அல்லது மிரட்டிவிடலாம் என்று பிரதமர் மோடி நினைப்பதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவின் மூலமாக கடுமையாகத் தாக்கியுள்ளார்.
கரோனா வைரஸ் பரவல், பொருளாதார சரிவு, சீனத் தாக்குதல் என பல்வேறு விவகாரங்களில் முறையை திட்டமிடல் இல்லை என, மோடி தலைமையிலான பாஜக அரசை, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமரிசித்து வருகின்றன.
அதிலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து ஆளும் பாஜக அரசுக்கு எதிராக தன்னுடைய கருத்தை முன்வைத்து வருகிறார்.
அந்த வகையில் இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,
'இந்த உலகம் தன்னைப் போன்றது என பிரதமர் மோடி நம்புகிறார். அனைவரையும் விலைக்கு வாங்கிவிடலாம் அல்லது மிரட்டிவிடலாம் என்று நினைக்கிறார்.
ஆனால், உண்மைக்காக போராடுபவர்களை எந்த விலை கொடுத்தும் வாங்க முடியாது, அவர்களை எதற்கும் பணிய வைக்க முடியாது என்பதை அவர் புரிந்துக் கொள்ள மாட்டார்' என்று பதிவிட்டுள்ளார்.