பிரேசில் அதிபர் ஜெயிர் பொல்சொனோரோவுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து, அவர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார்.
உலக அளவில் கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கவைத் தொடர்ந்து பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் பிரேசில் அதிபர் ஜெயிர் பொல்சொனோரோவுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடி, பிரேசில் அதிபர் விரைவில் குணமடைய வேண்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
'எனது நண்பர் ஜனாதிபதி ஜெயிர் பொல்சொனோரோ விரைவாக குணமடைய எனது வாழ்த்துக்கள் என்று கூறிய அவர் இச்செய்தியை போர்த்துகீசிய மொழியிலும் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக பொல்சொனோரோ மூன்று முறை கரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என வந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை உடல்நிலை சரியில்லாததை தொடர்ந்து அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது குறிப்பிடத்தக்கது.