கேரளத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 339 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார்.
புதிதாக பாதிப்புக்குள்ளான 339 பேரில் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் 117 பேர், வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள் 74 பேர். இது தவிர்த்து கேரளத்திலேயே தொடர்பிலிருந்ததன் மூலம் பாதிக்கப்பட்டு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்கள் 133 பேர். அதேசமயம் இன்று 149 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து கேரளத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 6,534 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தேதியில் மொத்தம் 2,795 பேர் சிகிச்சையில் உள்ளனர். பலி எண்ணிக்கை 28 ஆக உள்ளது.
அங்கு மொத்தம் 1,85,960 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இதில் 3,261 பேர் மருத்துவமனைகளில் உள்ளனர். இதுவரை மொத்தம் 2,20,627 மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதில் 4,854 மாதிரிகளின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை.