இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கரோனா வைரஸ் பரவலின் தீவிரம் இன்னும் குறையவில்லை. இந்தியா முழுவதும் நாளொன்றுக்கு 24 ஆயிரம் பேர் என்ற அளவில் கரோனா பாதிப்பு இருந்து வருகிறது.
இந்நிலையில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்தும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் தில்லியில் மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
இதற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்,
'உலக அளவில் கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது என்ற செய்தியை நாம் சரியான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். இந்தியா உலகில் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடு.
ஒரு மில்லியனுக்கு 538 பேர் என்ற அளவில் இந்தியாவில் பாதிப்பு உள்ளது. இதுவே உலக அளவில் சராசரி 1,453 ஆக உள்ளது.
இந்தியாவில் கரோனா தற்போது சமூகப் பரவலாக மாறவில்லை என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். மக்கள்தொகை நெருக்கம் உள்ள பகுதிகளில் பாதிப்பு அதிகம் இருக்கலாம். ஆனால், அனைத்து இடங்களிலும் அல்ல' என்றார்.