ஹைதராபாத்: தெலங்கானா ராஜ்பவனில் பணியாற்றும் 48 ஊழியர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதே சமயம், ஆளுநர் தமிழிசைக்கு கரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா பாதித்த ஊழியர்களில், ராஜ் பவனில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் 28 காவலர்களும், மூன்றாம் நிலை ஊழியர்கள் 10 பேரும், ராஜ் பவனில் தூய்மைப் பணியை மேற்கொள்ளும் நான்காம் நிலை ஊழியர்களும் அவர்களது குடும்பத்தினரும் அடங்குவர்.
இந்த நிலையில், ராஜ் பவனில் பணியாற்றும் 150 ஊழியர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பணியில் இருந்த காவலர்கள் அவர்களது பட்டாலியனுக்கே அழைக்கப்பட்டனர். ஊழியர்கள் அனைவரும் தனிமைப்படுத்தும் அரசின் மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தனது சுட்டுரையில், எனக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவப்பு மண்டலத்தில் இருப்பவர்களும், கரோனா தொற்றாளருடன் தொடர்பில் இருந்தவர்களும் மிக விரைவாக கரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள். விரைவாக தொற்று கண்டறிந்தால் நமக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் நன்மையாக இருக்கும். பரிசோதனை செய்து கொள்ள அச்சப்படாதீர்கள். நீங்களும் செய்து கொள்ளுங்கள், மற்றவர்களையும் ஊக்கப்படுத்துங்கள் என்று வலியுறுத்தியுள்ளார்.