மும்பை: இந்தியாவை விட, பிரிஹன்மும்பை மாநகராட்சியில் கரோனா பாதித்த நோயாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் காலம் 50 நாள்களாக உள்ளதாக மும்பையின் மூத்த அரசு நிர்வாகி தெரிவித்துள்ளார்.
மருத்துவரின் பரிந்துரையின்றி அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யும் வகையில் கரோனா பரிசோதனை முறையை நாட்டில் முதல் முறையாக மாற்றியமைத்ததன் காரணமாக, மும்பையில் இந்த மாற்றம் நிகழ்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
பரிசோதனை முறையை மாற்றியத்தது முதல் நாள்தோறும் மும்பையில் மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனை 4 ஆயிரம் முதல் 6,800 ஆக உயர்ந்தது. அதே சமயம், ஒரு நாளில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படும் எண்ணிக்கை 1400ல் இருந்து 1200 ஆகவும் குறைந்தது என்று பிரிஹன்மும்பை மாநகராடசி ஆணையர் ஐ.எஸ். சாஹல் தெரிவித்துள்ளார்.
இந்த 1200லும், அறிகுறிகளுடன் இருப்பவர்கள் வெறும் 200 பேராக மட்டுமே இருந்தது. இதனால் 1200 பேரில் 200 பேருக்கு மட்டுமே படுக்கை வசதியை ஏற்படுத்திக் கொடுத்தால் போதும் என்ற நிலை உருவானது. மேலும், மும்பையில் குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கையும் தற்போது 70 சதவீதமாக உயர்ந்துள்ளது. அனைத்து நோயாளிகளுக்கும் படுக்கைகள் ஒதுக்கிய பிறகும் தற்போது 7000 படுக்கை வசதியும், தீவிர சிகிச்சைப் பிரிவில் 250 படுக்கை வசதியும் காலியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மும்பையில் மார்ச் 11 ம் தேதி முதல் கரோனா நோயாளி கண்டறியப்பட்டார். மகாராஷ்டிர மாநிலத்தில் தற்போது 2,54,427 பேர் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்னர். 10,289 பேர் மரணம் அடைந்துளள்னர். இதில் மும்பையில் மட்டும் 92,988 பேருக்கு கரோனா பாதித்து, 5,288 பேர் பலியாகியுள்ளனர்.